ஈரோட்டில் பரிதாபம் லாரி மோதி, ஸ்கூட்டரில் சென்ற பெண் சாவு

ஈரோட்டில் லாரி மோதி ஸ்கூட்டரில் சென்ற பெண் இறந்தார். தனது தாய் இறந்ததைக்கூட அறியாமல் 4 வயது மகன் அவரை தட்டி எழுப்ப முயன்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
ஈரோட்டில் பரிதாபம் லாரி மோதி, ஸ்கூட்டரில் சென்ற பெண் சாவு
Published on

ஈரோடு,

ஈரோடு ஆர்.என்.புதூர் வீரப்பண்ணாடியூரை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் பிரசாந்த் (வயது 25). இவர் ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சேமளா (வயது 25). இவர்களுடைய மகன் மித்ரன் (4).

சேமளா பி.பி.அக்ரஹாரத்தில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர் தனது மகன் மித்ரனை அழைத்து கொண்டு வேலைக்கு சென்றார். அதன்பின்னர் இரவில் வேலையை முடித்துவிட்டு சேமளா தனது ஸ்கூட்டரில் மகனுடன் வீட்டுக்கு திரும்பினார்.

அவர் ஈரோடு பவானி ரோட்டில் சுண்ணாம்பு ஓடை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று சேமளா ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி சேமளாவும், மகன் மித்தரனும் கீழே விழுந்தனர். அப்போது லாரியின் பின்சக்கரம் சேமளாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சேமளா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், சிறுவன் மிதரன் காயத்துடன் உயிர் தப்பினான்.

விபத்து ஏற்பட்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது சாலையில் இறந்து கிடந்ததை அறியாமல் சிறுவன் மித்ரன் தனது தாயை தட்டி எழுப்ப முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த மித்ரனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான்.

மேலும், இறந்த சேமளாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com