தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே பரிதாபம்; மின்சாரம் தாக்கி அக்காள்- தம்பி பலி

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் அருகே கள்ளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 45). இவருக்கு திருமணமாகாததால் தனது அக்காள் விஜயலட்சுமி (57) என்பவர் வீட்டில் தங்கி இருந்து விவசாய பணிகளுக்கு உதவியாக இருந்து வந்தார்.
விஜயலட்சுமி; விஜயராஜ்
விஜயலட்சுமி; விஜயராஜ்
Published on

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜயலட்சுமியின் தோட்டத்தில் கணுப்புல் கட்டிவிட்டு மாட்டுக்கு புல் அறுக்க சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த விஜயலட்சுமி தோட்டத்துக்கு சென்று பார்த்தார்.

அப்போது அங்கு விஜயராஜ் கீழே விழுந்து கிடந்தார். அருகில் வந்து பார்த்தபோது அவர் மீது மின்சார வயர் கிடந்தது. தம்பியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு, அவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரியாமல் விஜயலட்சுமி விரைந்து சென்று மின்கம்பியை அகற்ற முயன்றுள்ளார். அப்போது விஜயலட்சுமியையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயலட்சுமி, விஜயராஜ் மீது விழுந்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தாயுடன் சென்ற மகள் தனலட்சுமி (18) அதிர்ச்சி அடைந்து ஊருக்குள் ஓடிச்சென்று தகவல் தெரிவித்தார். பொதுமக்கள் விரைந்து வந்து பார்த்தனர்.

பின்னர் இதுபற்றி மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின்சாரத்தை அணைத்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் குருவிகுளம் போலீசார் வந்தனர். 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அக்காள்- தம்பி இருவரும் மின்சாரம் தாக்கி இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com