

பெங்களூரு,
இந்த ஆண்டுக்கான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது. இந்த வேளையில் திடீரென்று தேர் சாய்ந்து பக்தர்கள் கூட்டத்தில் விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இருப்பினும், தேரின் அடியில் 50க்கும் அதிகமான பக்தர்கள் சிக்கினர்.
உடனே துரிதமாக செயல்பட்ட பக்தர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருடன் சேர்ந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால், தேரின் அடியில் சிக்கியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர். இருப்பினும் 10 பக்தர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சக்கரத்தின் அச்சு முறிந்ததால் தேர் சாய்ந்து விழுந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் கொட்டூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.