

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளம் மலையடிவாரம் பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் விநாயகர், முருகர், கருப்புசாமி, மஞ்சமாதா தெய்வங்கள் எழுந்தருளியுள்ளன. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகளோடு சுவாமி பிரதிஷ்டை நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாக சாலை பூஜை, திரவ்யாஹுதி, நாடி சந்தனம், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷகம் நடந்தது. மூலஸ்தான சுவாமிகளுக்கு புனிதநீரால் அபிஷகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் செட்டிகுளம், மலையடிவாரம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், மாவிலிங்கை, பொம்மனப்பாடி, குரூர், சிறுவயலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.