அஞ்சுகிராமம் அருகே பரிதாபம் கார் கவிழ்ந்து காங்கிரஸ் பிரமுகர் பலி

அஞ்சுகிராமம் அருகே கார் கவிழ்ந்து காங்கிரஸ் பிரமுகர் பலியானார்.
அஞ்சுகிராமம் அருகே பரிதாபம் கார் கவிழ்ந்து காங்கிரஸ் பிரமுகர் பலி
Published on

அஞ்சுகிராமம்,

குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே உள்ள எட்டுக்கூட்டு தேரிவிளையை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 50). பேரூராட்சி முன்னாள் தலைவர். மேலும், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் இருந்தார். இவர் நேற்று காலையில் திருநெல்வேலியில் ஒரு நண்பரின் வீட்டில் நடந்த குடும்ப விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டி சென்றார்.

அஞ்சுகிராமம் காணிமடம் சந்திப்பு, நாற்கர சாலையில் சென்று கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. திடீரென சாலையில் இருந்த தடுப்பு வேலியில் மோதி, அருகில் இருந்த வாழை தோட்டத்தில் பாய்ந்தது. இதில் கார் உருண்டு 10 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. மேலும், காரின் முன்பகுதி சேற்றில் புதைந்தது.

இடிபாடுகளுக்குள் சிக்கிய பாலச்சந்திரன் சேற்றில் முகம் புதைந்த நிலையில் பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். அவர்கள் அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து பாலச்சந்திரனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

அதுபோல், பாலச்சந்திரன் இறந்த தகவல் அறிந்ததும், உறவினர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவருக்கு பூங்கோதை என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com