தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் வயலில் தேங்கிக் கிடக்கும் மழை நீரால் வாழைகள் அழுகின

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் வயலில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு பயிரிட்டுள்ள வாழைகள் அழுகின. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் வயலில் தேங்கிக் கிடக்கும் மழை நீரால் வாழைகள் அழுகின
Published on

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி பகுதியில் விவசாயிகள் வாழை மற்றும் நெல் பயிரிட்டுள்ளனர். இந்த வருடம் போதுமான தண்ணீர் இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியோடு விவசாய பணிகளில் ஈடுபட்டனர். நன்றாக வளர்ந்து வந்த நெல், வாழை பயிர்களில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையின் காரணமாக வயல்களில் அதிகப்படியான மழைநீர் தேங்கியது.

மழைநீரை வெளியேற்றுவதற்கு விவசாயிகள் பல வகைகளில் முயற்சி செய்தும் தொடர் மழையின் காரணமாக அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வீணானது. தொடர்ந்து பல நாட்களாக வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நன்கு வளர்ந்த நிலையில் காணப்பட்ட வாழைகளால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகளுக்கு, வாழைகளை சுற்றி தேங்கி நின்ற தண்ணீர் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

அதிக செலவு

இதுவரை வாழை பயிரிடுவதற்கு வயல்களை உழவு போடுவதற்காக ரூ.5 ஆயிரமும், ஏக்கருக்கு ஆயிரம் வாழைக்கன்றுகள் பயிரிடுவதற்கு ரூ.10ஆயிரமும், இரண்டு வெட்டு வெட்டி கான் தோண்ட ரூ.30ஆயிரமும், உரம் போட ரூ.10ஆயிரமும் என சுமார் ரூ 55 ஆயிரம் முதல் ரூ.60ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். மேலும் வயலை கட்டுகுத்தகைக்கு விவசாயிகள் அதிக பணம் கொடுத்து எடுத்துள்ளனர்.

நெல் பயிர்களுக்கும் இந்த மழை பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல் நாற்று நட உழவு போடுவதற்காக ரூ.5 ஆயிரமும், நெல் நாற்றுக்கு ரூ.5 ஆயிரமும், நடுவை செய்வதற்கு ரூ.4 ஆயிரமும், உரமிடுவதற்கு ரூ.3 ஆயிரமும் என மொத்தம் ரூ.17 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஏக்கருக்கு செலவு செய்துள்ளனர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

இதுகுறித்து அத்திமரப்பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், வாழையில் அதிகப்படியான தண்ணீர் தேங்கியதால் வாழைக்கன்றுகள் அழுகி, மடல்கள் அனைத்தும் காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். தற்போது அரசு அதிகாரிகள் மழையினால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். அத்திமரப்பட்டியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு போதுமான நிவாரணம் கொடுத்தால் தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com