கரும்புக்கான நிலுவைத்தொகையை வங்கிகள் கடனில் வரவு வைக்கக்கூடாது விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் செலுத்த குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

கரும்புக்கான நிலுவைத்தொகையை வங்கிகள் கடனில் வரவு வைக்கக்கூடாது. விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் செலுத்த குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கரும்புக்கான நிலுவைத்தொகையை வங்கிகள் கடனில் வரவு வைக்கக்கூடாது விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் செலுத்த குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், உதவி இயக்குனர் அய்யம்பெருமாள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் பேச்சு

தஞ்சை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் பேசியதாவது:-

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு அரவைப்பருவம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. நீண்ட காலமாக கரும்பு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் அடிப்படையிலும், கலெக்டரின் முயற்சியாலும் தமிழக அரசு தற்போது 1 ஆண்டு நிலுவைத்தொகையில் பாதியான டன்னுக்கு ரூ.225 வழங்க உத்தரவிட்டுள்ளது. இதனை விவசாயிகளின் கடனில் வரவுவைக்க வங்கிகள் முயன்று வருகின்றன. அவ்வாறு இல்லாமல் பொங்கல் பண்டிகை வருவதால் விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் கழிவுகளை, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும்.

கலெக்டர் உத்தரவு

கலெக்டர் கோவிந்தராவ்:- கரும்பு நிலுவைத்தொகையை வங்கிகள் விவசாயிகளின் கடனில் வரவு வைக்காமல் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்.

வேங்கராயன்குடிகாடு வைத்தியலிங்கம்:- வேங்கராயன்குடிகாடு, அதினாம்பட்டு, கொ.வல்லுண்டாப்பட்டு, நா, வல்லுண்டாப்பட்டு, சூரியப்பட்டி, நாஞ்சிக்கோட்டை, வடக்குப்பட்டு ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய பிற பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று, பல நாட்கள் காத்திருந்து விற்பனை செய்யவேண்டிய நிலை உள்ளது. தற்போது சம்பா தாளடி அறுவடைப்பணி தொடங்கியுள்ள நிலையில் வேங்கராயன்குடிகாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com