துங்காவி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படாததை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று சமூக ஆர்வலர் போராட்டம்

கணியூர் அருகே துங்காவி பகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படாததை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று சமூக ஆர்வலர் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கச்செய்தனர்.
துங்காவி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படாததை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று சமூக ஆர்வலர் போராட்டம்
Published on

கணியூர்,

திருப்பூர் மாவட்டம் கணியூர் அருகே உள்ள துங்காவி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் துங்காவி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் நவநீதகிருஷ்ணன் (வயது 40) என்பவர் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் கடன் வழங்கப்படவில்லை எனத்தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நவநீதகிருஷ்ணன் நேற்று காலை 9 மணி அளவில் அந்தபகுதியில் இருந்த செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது. உடனடியாக இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் சரவணன் (மடத்துக்குளம்), சசிகுமார் (கணியூர்) மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதுபோல் உடுமலை தீயணைப்பு நிலைய அதிகாரி நாகராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்தனர்.

செல்போன் கோபுரத்தில் ஏறி நின்ற நவநீதகிருஷ்ணன் துங்காவி பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் உடனடியாக வட்டார வளர்ச்சி அதிகாரி இங்கு வரவேண்டும். இல்லாவிட்டால் கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் கீழே இறங்கவில்லை.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் வந்தார். அவர் நவநீதகிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து காலை 11 மணி அளவில் நவநீதகிருஷ்ணன் கீழே இறங்கி வந்தார். இதனால் 2 மணி நேரம் நீடித்தபோராட்டம் முடிவுக்கு வந்தது.

கீழே இறங்கி வந்த நவநீதகிருஷ்ணன் தனது மார்பிலும், முதுகிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் துங்காவி பொதுமக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஒட்டியிருந்தார். அவரை போலீசார், தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக அழைத்து வந்தனர். பின்னர் நவநீதகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

துங்காவியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், வீட்டு குடிநீர் இணைப்பு, தார்ச்சாலை உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும், அரசின் உதவிகளும் கிடைக்கவில்லை. மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்று சேர்வதில்லை. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு கடன் உதவிகள் வழங்கப்படாமல் மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பலமுறை பொதுமக்களுடன் சென்று மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கும் மனு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும், தமிழக கவர்னரின் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பியும், புகைப்படம், வீடியோ அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டேன். எனவே துங்காவி பகுதி மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com