

பெங்களூரு,
பெங்களூரு குமாரசாமி லே-அவுட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் உமேஷ்(வயது 35). இவருக்கும், இந்திரா என்ற பெண்ணிற்கும் கடந்த 7 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் திருமணம் முடிந்து 2 பேரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையே உமேசுக்கு, இந்திராவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 2 பேரும் பிரிந்தனர்.
இதையடுத்து 2 பேரின் குடும்பத்தினரும் உமேஷ், இந்திராவிடம் பேசி சமாதானம் செய்து அவர்களை சேர்த்து வைத்தனர்.
இதையடுத்து 2 பேரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். மீண்டும் உமேசிற்கு, இ்ந்திராவின் நடத்தை மீது சந்தேகம் வந்தது. இதனால் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த உமேஷ் கத்தியை எடுத்து இந்திராவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த இந்திரா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குமாரசாமி லே-அவுட் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய இந்திராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இ்ந்திராவை பரிசோதித்த டாக்டர்கள் அவரின் உடலில் 17 முற கத்தியால் குத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.