பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தொழிலாளி அடித்துக்கொலை

குடிபோதையில் சிறுவனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தொழிலாளி அடித்துக்கொலை
Published on

பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 8-ந் தேதி கொத்தவால்சாவடி கந்தப்ப செட்டித்தெருவில் பிணமாக கிடந்தார். குடிபோதையில் அவர் இறந்து கிடப்பதாக கருதிய கொத்தவால்சாவடி போலீசார், கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் கண்ணனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் கண்ணனின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் பிணமாக கிடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த கண்ணன், பாரிமுனையைச் சேர்ந்த அப்பு (வயது 20) என்பவரின் 16 வயது தம்பியிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பு தனது நண்பர்களான ராஜ்குமார் (21), பன்னீர்செல்வம் (34) ஆகியோருடன் சேர்ந்து கண்ணனை அடித்துக்கொலை செய்தது தெரிந்தது.

இதையடுத்து கொத்தவால்சாவடி போலீசார் நேற்று அப்பு, ராஜ்குமார், பன்னீர்செல்வம் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com