செல்போன் பேசியபடி சென்றதால் மைல் கல்லில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

குன்னத்தூர் அருகே செல்போன் பேசியபடியே மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதால் மைல் கல்லில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
செல்போன் பேசியபடி சென்றதால் மைல் கல்லில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
Published on

குன்னத்தூர்,

ஊத்துக்குளியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று காலை 11 மணியளவில் குன்னத்தூரில் உள்ள வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு தனது மோட்டார்சைக்கிளில் ஊத்துக்குளி திரும்பிக்கொண்டிருந்தார்.

குன்னத்தூர் செங்கப்பள்ளி ரோட்டில் தனியார் பள்ளி அருகே சென்ற போது செல்போன் பேசியபடி சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் அப்பகுதியில் உள்ள மைல் கல்லில் வேகமாக மோதியது. இதில் மைல்கல் உடைந்து விழுந்தது. மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக குன்னத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com