வீட்டில் இருந்த பணத்தை சுய உதவிக்குழுவுக்கு செலுத்தியதால் கணவருடன் தகராறு; பெண் தற்கொலை - ஆரல்வாய்மொழி அருகே பரிதாபம்

வீட்டில் இருந்த பணத்தை சுய உதவிக்குழுவுக்கு செலுத்தியதால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார். ஆரல்வாய்மொழி அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வீட்டில் இருந்த பணத்தை சுய உதவிக்குழுவுக்கு செலுத்தியதால் கணவருடன் தகராறு; பெண் தற்கொலை - ஆரல்வாய்மொழி அருகே பரிதாபம்
Published on

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், தொழிலாளி. இவருடைய மனைவி சண்முகவடிவு (வயது 52). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. சுப்பிரமணியனும், சண்முக வடிவும் மகனுடன் வசித்து வருகிறார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன் சுப்பிரமணியன் வீட்டில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை காணவில்லை. இதுபற்றி அவர், மனைவி சண்முகவடிவிடம் கேட்டுள்ளார். அப்போது, அந்த பணத்தை எடுத்து மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு செலுத்தியதாக கூறியுள்ளார். இதனால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், சுப்பிரமணியன் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மாலையில் வீட்டுக்கு வந்த சுப்பிரமணியன் மனைவி இல்லாததால் பல இடங்களில் தேடியுள்ளார். ஆனாலும், சண்முகவடிவு கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலையில் குமாரபுரத்தை அடுத்த கண்ணப்பநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கொய்யா தோப்பில் சண்முகவடிவு பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற சுப்பிரமணியன் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

பின்னர், இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சண்முகவடிவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், மனமுடைந்த நிலையில் இருந்த சண்முகவடிவு மாலையில் கணவர் மீண்டும் தன்னுடன் தகராறு செய்வாரோ என நினைத்து வீட்டை விட்டு வெளியேறி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணத்தகராறில் மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com