மாணவர்களை வெறும் காலில் வெயிலில் நிற்க வைத்து தண்டனை

‘ஷூ’ அணிந்து வராததால் மாணவ-மாணவிகளை வெறும் காலில் வெயிலில் நிற்க வைத்து தண்டனை வழங்கியதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களை வெறும் காலில் வெயிலில் நிற்க வைத்து தண்டனை
Published on

அம்பத்தூர்,

அம்பத்தூர் மார்க்கெட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அரசு உதவி பெறும் குப்தா என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இந்த உயர்நிலைப்பள்ளியில் 750 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் செருப்பு அணிந்து வந்த நிலையில், பள்ளி நிர்வாகம் திடீரென 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஷூ அணிந்துதான் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.

ஆனால் நேற்று முன்தினம் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஷூ அணியாமல் வழக்கம்போல் காலில் செருப்பு அணிந்து வந்தனர்.

இதனால் பள்ளி நிர்வாகம், அவர்களை வகுப்புக்கு அனுப்பாமல், அவர்கள் அணிந்து இருந்த செருப்பை கழற்ற சொல்லி வெறும் காலில் வெயிலில் நிற்க வைத்து தண்டனை வழங்கியதாக தெரிகிறது. நீண்டநேரம் வெறும் காலில் வெயிலில் நின்ற மாணவ-மாணவிகள் சோர்வடைந்து சிறிது நேரத்தில் தரையில் அமர்ந்துவிட்டனர்.

இந்த தகவல் அறிந்ததும் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு விரைந்து வந்து, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தங்களால் உடனடியாக ஷூ வாங்க முடியாது. கால அவகாசம் கொடுக்கும்படி கேட்டு பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதை ஏற்று மாணவர்கள் ஷூ அணிந்து வர பள்ளி நிர்வாகம் கூடுதல் கால அவகாசம் கொடுத்தது. பின்னர் மாணவ- மாணவிகள் அனைவரும் வகுப்பறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பிறகு பெற்றோர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com