கலெக்டர் அலுவலகம் முன்பு 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம் நிலத்தை திரும்ப ஒப்படைக்க கோரிக்கை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம் நிலத்தை திரும்ப ஒப்படைக்க கோரிக்கை
Published on

திருவண்ணாமலை,

சென்னையில் இருந்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை 8 வழிச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு தொடங்கப்பட்டு பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதற்கிடையில் இந்த திட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இத்திட்டத்திற்காக வருவாய்த்துறை ஆவணங்களில் விவசாயிகளின் நிலம் அரசின் பெயரில் மாற்றப்பட்டத்தை அந்தந்த விவசாயிகள் பெயரிலேயே மாறுதல் செய்து தரக்கோரி 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு சார்பில் நிலம் மீட்க மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, வக்கீல் அபிராமன், அழகேசன், ராமதாஸ் உள்பட நிர்வாகிகள், இத்திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இவர்கள் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அண்ணா நுழைவு வாயில் அருகில் இருந்து தொடங்குவதாக இருந்தது. போலீசார் அனுமதி அளிக்காததால் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஊர்வலமாக வந்த கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகள் பெயரில் நிலப்பட்டாவை மாற்றம் செய்து தரக் கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர்.

அப்போது போலீசார் அவர்களை உள்ளே செல்ல விடாமல் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் இரும்பு கதவை பூட்டினர். பின்னர் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் உள்ளே சென்று மனு கொடுத்து விட்டு வாருங்கள் என்று போலீசார் கூறினர்.

இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் நாங்கள் அனைவரும் உள்ளே சென்று அதிகாரியிடம் மனு அளிப்போம் என்றும், இந்த திட்டத்திற்காக நிலத்தை கொடுத்த நாங்கள் அதிகாரிகளை பார்க்க கூடாதா? என்றும் ஆவேசமாக பேசினர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் நடந்த தர்ணா போராட்டத்திற்கு பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமியிடம் மனு அளித்தனர்.

8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பினரின் போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com