காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஓட்டல் ஊழியர்

மனைவியை சேர்த்து வைக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஓட்டல் ஊழியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஓட்டல் ஊழியர்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள வெடியக்காடு ஊராட்சிக்குட்பட்ட தேவலாபுரம் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 26). ஓட்டல் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சுரேஷ் வேலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சகிலா (20) என்பவரை கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்தார். இருவரும் வேறு, வேறு சமூகம் என்பதால் இவர்களின் காதலுக்கு சகிலாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் ஜோடி கடந்த 30-5-2019 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந் தேதி சகிலாவின் பெற்றோர் தேவலாபுரம் கிராமத்திற்கு வந்து தன்னுடைய மகளை அழைத்து சென்றனர்.

இதை அறிந்த சுரேஷ் தன் காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு அவரது பெற்றோரை அணுகி கேட்டபோது சகிலாவை அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனையடைந்த சுரேஷ் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தான் ஏற்கனவே கையில் வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தன் காதல் மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியபடி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொள்ள முயன்றார்.

இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பார்த்திபன், சதாசிவம் மற்றும் போலீசார் ஓடி வந்து சுரேஷ் கையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்து அவரை சமாதானப்படுத்தி அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர்.

அப்போது அவர் தன்னுடைய காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கண்ணீர் விட்டு அழுதார். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணைக்காக சுரேசை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com