வருகிற 18-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு சட்ட நகல்எரிப்பு போராட்டம்; விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வருகிற 18-ந் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்துவது என்று விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வருகிற 18-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு சட்ட நகல்எரிப்பு போராட்டம்; விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
Published on

காமநாயக்கன்பாளையம்,

திருப்பூர் மாவட்ட உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பல்லடத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி இளைஞர் அணி மாவட்ட தலைவர் சோமசுந்தரம், ஒருங்கிணைப்பாளர் வை.பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், குங்குமபாளையம் முத்துசாமி, வேங்கிபாளையம் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை திரட்டி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தை வருகிற 18-ந் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்துவது, 20-ந் தேதி காலை 10 மணிக்கு குண்டடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்கும் கண்டன கூட்டத்தை நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம், மாநில செயலாளர் விஸ்வநாதன், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஈசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, விவசாயி தங்கமுத்து ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

விவசாயிகள் மீது தமிழக அரசு கடும் அடக்குமுறையை பிரயோகிப்பது ஏற்புடையதல்ல. உயர்அழுத்த மின் கோபுரம் அமைக்கப்படுவதால் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகளை தமிழக அரசு முறையாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் மாற்றுவழியாக பூமிக்கடியில் கேபிள் வழியாக திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com