சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மனைவியுடன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

மகனை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதால் மனைவியுடன் மாற்றுத்திறனாளி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மனைவியுடன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
Published on

சேலம்,

சேலம் அருகே உள்ள கருப்பூர் கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சேகர்(வயது 55). மாற்றுத்திறனாளியான இவர் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தங்கமணி. இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து இருதரப்பினரும் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் நேற்று காலை சேகரின் மகன் சூர்யா உள்பட 2 பேரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். நீண்ட நேரமாகியும் அவர்களை போலீசார் விடுவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சேகர் தனது மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று மண்எண்ணெய் கேனை பறித்து அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள் கூறும் போது, விசாரணைக்காக அழைத்து சென்ற தனது மகனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com