சமூக விரோதிகளின் கூடாரமாக திகழும் பயன்பாடு இல்லாத கழிப்பறை கட்டிடம்

ஓட்டேரி பகுதியில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழும் பயன்பாடு இல்லாத மாநகராட்சி கழிப்பறை கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக விரோதிகளின் கூடாரமாக திகழும் பயன்பாடு இல்லாத கழிப்பறை கட்டிடம்
Published on

திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியில் 15 வருடங்களுக்கு முன்பு 75வது வார்டில் மாநகராட்சியால் கழிப்பறை கட்டப்பட்டது. நாளடைவில் அவரவர் வீட்டில் அவர்கள் வசதிக்கேற்ப கழிப்பறை அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த 10 வருடங்களாக இந்த மாநகராட்சி கழிப்பறை பயன்படுத்தப்படாமல் உள்ளது.

இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிப்பறையை பூட்டி வைத்து உள்ளனர். தற்போது கழிப்பறை கட்டிடம் சமூக விரோதிகளால் கஞ்சா புகைக்கவும், மது அருந்தவும் மட்டுமே பயன்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் பெண்கள் மற்றும் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.

10 நாட்களுக்கு முன்பு கஞ்சா புகைத்து விட்டு அங்கிருந்து திரும்பிய சிலர் அப்பகுதியில் உள்ள வீடுகளின் ஜன்னல்களில் கைவிட்டு செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக தலைமை செயலக போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்தனர்.

தினமும் 10க்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் பூட்டி வைக்கப்பட்டு இருக்கும் இரும்பு கேட்டில் ஏறி கழிப்பறை கட்டிடம் உள்ளே சென்று மது அருந்துவதும், செல்போனில் சத்தமாக பாடல்களை கேட்டு ரகளை செய்வதுமாக உள்ளனர் என அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். எனவே சமூக விரோதிகளின் கூடாரமாக திகழும் பயன்பாடு இல்லாத இந்த மாநகராட்சி கழிப்பறையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com