தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்
Published on

பெரம்பலூர்,

மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நேற்று நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டிகள் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார். தொல்நாகரிகம் தமிழர் நாகரிகம் என்கிற தலைப்பில் கட்டுரை போட்டியும், பரவட்டும் பாவேந்தம் என்கிற தலைப்பில் கவிதை போட்டியும், எங்கள் தமிழ், தமிழின் இனிமை, தமிழ்ப்பேறு, மானுடத்தின் வெற்றி, சிந்தனைத் தெளிவு உள்ளிட்ட தமிழ் சார்ந்த 30 தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.

இதேபோல அரியலூர் மாவட்ட அளவில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரகத்தின் உதவியாளர் சாந்தி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதில், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், சான்றிதழ்களும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில் வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com