இருதரப்பினர் இடையே மோதல்: போலீசாரை கண்டித்து சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஏலகிரிமலையில் நிலத்தகராறில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இருதரப்பினர் இடையே மோதல்: போலீசாரை கண்டித்து சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Published on

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலை முத்தானூர் பகுதியில் நியூமேன்துரை என்பவர் 44 ஏக்கர் நிலத்தை பராமரித்து வந்துள்ளார். பின்னர் அவர் சென்னை பகுதியைச் சேர்ந்த மகிழரத்தினம் என்பவருக்கு விற்றுள்ளார்.

அதன் பிறகு மகிழரத்தினம் என்பவர் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த இக்பால் என்பவரின் மனைவி பஹிம் என்பவருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இக்பால் முத்தானூர் பகுதியில் உள்ள 44 ஏக்கர் நிலத்தில் 240 வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்துள்ளார். வீட்டுமனை வாங்கியவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஏலகிரிமலைக்கு வந்தனர். அப்போது முத்தானூர் பகுதியில் உள்ள இடத்தை சுத்தம் செய்வதற்காக பொக்லைன் எந்திரத்தைக் கொண்டு சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முத்தனூர் பகுதி பொதுமக்களுக்கும் வீட்டுமனை வாங்கியவர்ளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இக்பால் தரப்பினருக்கும், மனோகரன் என்பவரின் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

2 பேர் படுகாயம்

இதில் இக்பால் தரப்பில் தர்மபுரி மாவட்டம் கொல்லஹள்ளி பகுதியை சேர்ந்த பழனிசாமி (46) என்பவருக்கு மண்டை உடைந்தது. இதேபோன்று மனோகரன் தரப்பில் முத்தனூர் பகுதியை சார்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி பாப்பாத்தி (35) என்பவரும் படுகாயமடைந்தார். படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பழனிசாமி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ஏலகிரிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரிடையே ஏற்பட்ட தாக்குதலை தடுத்து நிறுத்தினர். ஆனால் வீட்டுமனை வாங்கியவர்கள் பழனிசாமியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாரிடம் தெரிவித்தனர்.

சாலை மறியல்

ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தியதால் ஆத்திரமடைந்த வீட்டுமனை வாங்கியவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் முத்தனூர் பகுதியில் திருப்பத்தூர் ஏலகிரிமலை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். பின்பு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் சுமார் 1 கிலோமீட்டர் வரை வாகனங்கள் நின்றதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com