பா.ஜனதா முதல் வேட்பாளர் பட்டியல் 22-ந் தேதி வெளியாகிறது

120 தொகுதிகளுக்கு பா.ஜனதா முதல் வேட்பாளர் பட்டியல் வருகிற 22-ந் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜனதா முதல் வேட்பாளர் பட்டியல் 22-ந் தேதி வெளியாகிறது
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி வாக்காளர்களின் கருத்துகளை கேட்டு அறிந்து அதன் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை பா.ஜனதா மேற்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் 120 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜனதா இறுதி செய்துள்ளது. இந்த 120 தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிகபட்சமாக 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கும் டிக்கெட் வழங்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எம்.பி.க்களில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மற்றும் ஸ்ரீராமுலு ஆகியோருக்கு மட்டும் டிக்கெட் வழங்கப்படுகிறது. மற்ற எம்.பி.க்கள் விரும்பினாலும் அவர்களுக்கு டிக்கெட் இல்லை என்று பா.ஜனதா மேலிடம் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 120 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் வருகிற 22-ந் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் பா.ஜனதா தேர்தல் கமிட்டி ஒப்புதல் வழங்கியதும் இந்த பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வெளியிட உள்ளார். அதிகம் பேர் டிக்கெட் கேட்கும் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வேட்பாளர்கள் யார் என்று அறிவிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com