சட்டசபையில் பா.ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்கும் ஷோபா எம்.பி. பேட்டி

120 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக உள்ளனர், அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபையில் பா.ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று ஷோபா எம்.பி. கூறினார்.
சட்டசபையில் பா.ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்கும் ஷோபா எம்.பி. பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் 104 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜனதாவை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வஜூபாய் வாலா அழைத்தார். மேலும் அடுத்த 15 நாட்களில் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் அவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தனிப்பெரும்பான்மை இல்லாமல் பா.ஜனதா ஆட்சி அமைத்ததை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று(சனிக்கிழமை) பிற்பகல் 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அப்போது எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ஷோபா எம்.பி. நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பா.ஜனதா வரவேற்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதித்து நாளை(அதாவது இன்று) முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா, சட்டசபையில் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கும். 120 எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவாக உள்ளனர். அது நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அனைவருக்கும் தெரியவரும். தற்போது பிற கட்சிகளைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவிடம் தொடர்பில் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிப்போம் என்பதில் நாங்கள்(பா.ஜனதா) நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

இவ்வாறு ஷோபா எம்.பி. கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com