குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்களுடன் பா.ஜ.க.மறியல்

குடிநீர் பிரச்சினையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பா.ஜ.கட்சியினர் பொதுமக்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்களுடன் பா.ஜ.க.மறியல்
Published on

ஆற்காடு,

ஆற்காடு ஒன்றியம் சக்கரமல்லூர், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தொலைதூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது. இது குறித்து அந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உள்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குடிநீர் கிடைப்பதற்கு எந்த நடவடிக்கையும் அவர்களால் எடுக்கப்படவில்லை.

போதிய மழை பெய்தும் கோடைகாலம் தொடங்கும் முன்னரே குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. இனி வரும் காலங்களில் மிகவும் அவதிப்பட நேரும் என்பதால் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நேற்று பாரதீய ஜனதா கட்சியினர் பொதுமக்களுடன் மறியலுக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் காலி குடங்களுடன் ஆற்காடு-செய்யாறு சாலையில் முப்பதுவெட்டியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆற்காடு-செய்யாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம், வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் மற்றும் அலுவலர்களும் போலீசாரும் மறியல் நடந்த இடத்துக்கு சென்றனர். அப்போது விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த மறியலால் பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் முடிவுக்கு வந்ததும் போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com