பயிர்க்கடன் தள்ளுபடியால் 90 சதவீத விவசாயிகள் பயன் உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா பதில்

பா.ஜனதா அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தால் 90 சதவீதம் விவசாயிகள் பயன்பெற்றதாக அக்கட்சியின் மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே தெரிவித்தார்.
பயிர்க்கடன் தள்ளுபடியால் 90 சதவீத விவசாயிகள் பயன் உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா பதில்
Published on

நாக்பூர்,

சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசின் பயிர்க்காப்பீடு திட்டம் மற்றும் மாநில அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளை சென்று சேரவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் பா.ஜனதாவுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை என்ற கோணத்தில் அவரின் பேச்சு இருந்தது.

இந்த நிலையில் நேற்று பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ. 34 ஆயிரத்து 22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்தார். இதன்மூலம் இதுவரை 90 சதவீதம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இந்த தள்ளுபடியை முழுமையாக செயல்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது.

மேலும் விவசாயிகள் தற்கொலை சம்பவம் அதிகம் நிகழும் 14 மாவட்டங்களில் கிலோ அரிசி ரூ. 2-க்கும், கோதுமை ரூ.3-க்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க அரசு இதேபோல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனாவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் இதுவரை சிவசேனாவுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com