பா.ஜனதா-சமூக அமைப்பினர் மோதல் கற்களை வீசி தாக்கினர்

உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு கருப்புக்கொடி காட்டியதால் பாரதீய ஜனதா கட்சியினரும், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களும் மோதிக் கொண்டனர். அப்போது கற்கள், கட்டைகளை, பிளாஸ்டிக் நாற்காலிகளை வீசி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
பா.ஜனதா-சமூக அமைப்பினர் மோதல் கற்களை வீசி தாக்கினர்
Published on

புதுச்சேரி,

பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டு முடக்கிய எதிர்க்கட்சிகளை கண்டித்து நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். புதுவையில் சுதேசி மில் அருகே உண்ணாவிரதம் நடந்தது. இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்போவதாக பெரியார் சிந்தனையாளர் இயக்கம் அறிவித்திருந்தது.

அதன்படி இயக்க தலைவர் தீனா தலைமையில் அவர்கள் சுப்பையா சிலை அருகே கூடினார்கள். அங்கிருந்து கருப்புக்கொடியுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் திராவிடர் கழகம், மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழர் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். அவர்கள் புதிய பஸ் நிலையம் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்தனர். அதையும் மீறி 2 பேர் கருப்புக்கொடியுடன் பாரதீய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம் இருந்த இடம் நோக்கி ஓடினார்கள். அதில் ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

மற்றொருவர் ரோட்டின் நடுவில் இருந்த தடுப்புக்கட்டையை (டிவைடர்) தாண்டி உண்ணாவிரத பந்தல் அருகே சென்று கருப்புக்கொடி காட்டினார். அப்போது செல்வகணபதி எம்.எல்.ஏ. பேசிக்கொண்டிருந்தார். அந்த நபர் கருப்புக்கொடி காட்டுவதை கண்டதும் ஆத்திரமடைந்த பாரதீய ஜனதா கட்சியினர் அங்கு போடப்பட்டு இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கினார்கள்.

இதைத்தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை துரத்திக்கொண்டு பாரதீய ஜனதா கட்சியினரும் வந்தனர். இந்தநிலையில் பஸ் நிலையம் அருகே போலீசாரால் மடக்கப்பட்ட சமூக அமைப்பினரும் அங்கு வந்தனர். அப்போது இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். ஒருவர் மீது ஒருவர் கற்கள், கட்டைகளை வீசி தாக்கிக்கொண்டனர்.

இதனால் அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது. இந்தநிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கருப்புக்கொடி ஊர்வலம் நடத்தியவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

இந்தநிலையில் பாரதீய ஜனதா கட்சியினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதிபெற்று போராட்டம் நடத்திய தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று புகார் தெரிவித்தனர். அவர்களை இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினார்கள். தொடர்ந்து பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உண்ணாவிரதம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com