

கல்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கடலூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், சின்னக்குப்பம், ஆழிக்குப்பம் பகுதிகளை உள்ளடக்கிய இடமான கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கடலுக்குள் வெளிநாட்டினர் உதவியின்றி இந்திய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கடந்த ஜூன் மாதம் தடுப்பணை அமைக்கப்பட்டது.
இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா பெரியகுப்பம் பகுதியில் நடந்தது. இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் புவி அறிவியல் சுற்றுச்சூழல் மந்திரி ஹர்ஷவர்த்தன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கடலுக்குள் கண்ணுக்கு தெரியாத வகையில் 1.7 கி.மீ. தொலைவுக்கு 60 மீட்டர் இடைவெளி விட்டு ரூ.20 கோடி செலவில் பாலி புரோபலைன் பைகளில் மணல் நிரப்பி சிலிண்டர் வடிவில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் புயலால் கடல்கரையோர கிராமங்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். கடல் அரிப்பு ஏற்படாது. கடலில் அதிகமாக மீன்கள் கிடைக்கும் இடங்கள் மற்றும் புயல், கடல் சீற்றம் பற்றியும் தெரிந்து கொள்ள தகவல்கள் வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் புவி அறிவியல் சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர் ராஜீவன், தேசிய கடல் தொழில் நுட்ப கழக இயக்குனர் ஆத்மநந்து, தேசிய கடலோர ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணமூர்த்தி, தேசிய கடல் தொழில் நுட்ப திட்ட இயக்குனர் விஜயா ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.