ஆழ்துளை நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலைபார்த்த சத்தீஷ்கர் மாநில தம்பதிகள் மீட்பு 2 பேர் கைது

ஆழ்துளை நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலைபார்த்த சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த 2 தம்பதியை போலீசார் மீட்டனர். அவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் வேலைவாங்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆழ்துளை நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலைபார்த்த சத்தீஷ்கர் மாநில தம்பதிகள் மீட்பு 2 பேர் கைது
Published on

சிப்காட்(ராணிப்பேட்டை),

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தில் சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வருவதாக அந்த மாநில அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் கலெக்டரை ராய்பூர் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார். அதன்பேரில் அவர்களை மீட்க கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், வாலாஜா தாசில்தார் விஜயகுமார், வேலம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரி மற்றும் வருவாய்த்துறையினர் நடத்திய விசாரணையில், சோளிங்கர் அருகே உள்ள மேல் வெங்கடாபுரத்தை சேர்ந்த நரசிம்மநாயுடு (வயது 62) என்பவரது ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தில் சிலர் கொத்தடிமைகளாக வேலைபார்ப்பது தெரியவந்தது. இந்த நிலையில் நிறுவன உரிமையாளர் நரசிம்ம நாயுடு வீட்டை நேற்று அதிரடியாக சோதனையிட்டனர்.

அங்கு சத்தீஷ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டம், ஜகதல்பூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராம் (35), அவரது மனைவி ரமா (30), நாராயணன் (40), அவரது மனைவி லட்சுமி (35) ஆகியோர் கடந்த 9 மாதங்களாக கொத்தடிமைகளாக வேலைபார்த்ததும், அவர்களுக்கு உணவைத்தவிர வேறு எந்த ஊதியமும் வழங்கப்படவில்லை என்பதும் அவர்களை உரிமையாளர் நரசிம்ம நாயுடு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியுடன் விவசாயம் மற்றும் வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து கொத்தடிமைகளாக வேலைபார்த்த 2 தம்பதியினரையும் அவர்கள் மீட்டு ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு விடுதலை சான்றும், உதவித் தொகையாக 2 குடும்பத்தினருக்கும் தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மேல்வெங்கடாபுரத்தை சேர்ந்த ஆழ்துளை நிறுவன உரிமையாளரான நரசிம்ம நாயுடு மற்றும் கொத்தடிமைகளை இங்கு அழைத்து வந்து இவரிடம் ஒப்படைத்த செய்த ஏஜெண்டு சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த குரு (50) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com