அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்த ‘போர்வெல்’ வாகனம் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

அனுமதி பெறாமல் வேலூர் மாநகரில் ஆழ்துளை கிணறு அமைத்த ‘போர்வெல்’ வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்த ‘போர்வெல்’ வாகனம் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
Published on

வேலூர்,

வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் நேற்று காலை காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது காகிதப்பட்டறை உழவர்சந்தை அருகே ஒரு வீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அவர் பார்த்தார். பின்னர் அவர், 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணனை தொடர்பு கொண்டு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வருவது தொடர்பாக கேட்டார். அப்போது ஆழ்துளை கிணறு அமைக்க யாரும் அனுமதி பெறவில்லை என்பது அவருக்கு தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர், உதவி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து உதவி கமிஷனர் மதிவாணன் மற்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மாநகராட்சியின் அனுமதி பெறாமல் ஆழ்துளை கிணறு போடப்பட்டது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் ஆழ்துளை கிணறு அமைக்க பயன்படுத்திய போர்வெல் வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆழ்துளை கிணறு அமைக்க மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும். மேலும் எந்த அளவுடைய குழாய் மூலம் ஆழ்துளை அமைக்கப்படுகிறது. விவசாய நிலமா?, வீட்டு தேவைக்கு அமைக்கப்படுகிறதா? என பல்வேறு தகவல்களை தெரிவித்து மாநகராட்சி நிர்ணயித்துள்ள தொகையை செலுத்த வேண்டும். அத்தொகையை செலுத்திய பின்னரே ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படும். அனுமதி பெறாமல் ஆழ்துளை கிணறு அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com