தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பர்கூர் அருகே வீரபத்திரசாமி கோவில் விழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
Published on

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கொண்டப்பநாயனப்பள்ளி கிராமத்தில் வீரபத்திர சாமி மற்றும் தோட்டண்ணன் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி கணபதி பூஜை, வாஸ்து பூஜை, கங்கை பூஜை மங்கள இசையுடன் நடந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் முதற்கால யாக பூஜை உள்ளிட்ட பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடந்தது.

தொடர்ந்து தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. விழாவின் இரண்டாம் நாளான 17-ந் தேதி காலை மங்கள இசையுடன் கும்ப கலசம் புறப்படுதல் நிகழ்ச்சியும், வீரபத்திர சாமிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும், பின்னர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

நேற்று காலை பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் அமர்ந்து கொள்ள, அவர்கள் தலைமீது பூசாரி தேங்காயை உடைத்தார். அத்துடன் குழந்தைகளுக்கு தலைமுடி எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கொண்டப்பநாயனப்பள்ளி, தாதன்வலசை, கீழ்குரும்பர் தெரு, பெருமாப்பட்டு, கந்திலி, ஜிஞ்சம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com