கடையின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் துணிகள் திருட்டு

கடையின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் துணிகள் திருட்டு.
கடையின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் துணிகள் திருட்டு
Published on

பூந்தமல்லி,

சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 43). இவர், கோயம்பேட்டில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள துணிகளை திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் அரும்பாக்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு துணி கடையில் நேற்று அதிகாலையில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 2 மர்ம நபர்கள், கடைக்குள் இருந்த ஜீன்ஸ் பேண்ட், சட்டைகள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவற்றை திருடிக்கொண்டு வெளியே வந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த அரும்பாக்கம் போலீசாரை பார்த்ததும் அந்த நபர்கள் தப்பிக்க முயன்றனர். ஆனால் போலீசார், கொள்ளையர்களை விரட்டிச்சென்றனர். அதில் ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார்.

விசாரணையில் அவர், காஞ்சீபுரம், எழில் நகர் பகுதியை சேர்ந்த வல்லரசு (21) என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com