கோவில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
கோவில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு
Published on

மீன்சுருட்டி:

அம்மன் கோவில்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வாழக்குட்டை கிராமத்தில் வாழ்முனி காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே கிராமத்தில் உள்ள மெயின்ரோடு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 40) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்தபின்னர் அவர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து இரவு நேர காவலாளியான அந்த கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்ற சாமிநாதன்(60) என்பவர், இரவில் காவல் பணியில் ஈடுபட்டார்.

பணம் திருட்டு

இந்நிலையில் நள்ளிரவில் கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள், கோவிலின் முன்கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கருவறை கதவின் பூட்டை உடைத்து கருவறைக்குள் சென்று, அங்குள்ள பீரோவை உடைத்து பார்த்ததாக தெரிகிறது. அதில் ஒன்றும் இல்லாததால், கோவிலின் முன் வாசலில் உள்ள உண்டியலின் பூட்டை கடப்பாரையை கொண்டு உடைத்து, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

கோவில் எதிரே உள்ள மண்டபத்தில் படுத்திருந்த கண்ணன் நேற்று காலை எழுந்து பார்த்தபோது வெளியில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கருவறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருட்டு நடந்த உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரம் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com