நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்துக்கு மறுத்த அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி கைது

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்துக்கு மறுத்த அண்ணனை, கத்தியால் வெட்டிக்கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்துக்கு மறுத்த அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி கைது
Published on

சென்னை,

சென்னை ராயப்பேட்டை சிவசுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 35). தனியார் பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருடைய தம்பி தனசேகர்(31). கார் டிரைவர்.

பாஸ்கருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்தநிலையில் பாஸ்கர், திடீரென தனக்கு திருமணம் வேண்டாம் என்று அடம்பிடிக்க தொடங்கினார். அண்ணனுக்கு திருமணம் முடிந்தால்தான் தனக்கு திருமணம் நடக்கும் என்று எண்ணிய தனசேகர், திருமணத்துக்கு சம்மதிக்கும்படி தனது அண்ணன் பாஸ்கரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். எனினும் பாஸ்கர், தனது முடிவில் பிடிவாதமாக இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் பாஸ்கரை மிரட்டி திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க தனசேகர் முடிவு செய்தார். அதன்படி நேற்று வீட்டில் இருந்த பாஸ்கரிடம் கத்தியை காட்டி, நீ திருமணத்துக்கு சம்பதிக்கவில்லை என்றால், உன்னை கொலை செய்துவிடுவேன் என்று தனசேகர் மிரட்டினார். ஆனால் அதற்கு பாஸ்கர் அஞ்சவில்லை.

இதனால் பாஸ்கர் கழுத்தில் வெட்டுவது போன்று தனசேகர் கத்தியை கொண்டு சென்றார். ஆனால் கத்தி, பாஸ்கர் கழுத்தில் ஆழமாக வெட்டியது. இதில் அவர் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

அண்ணனை தானே வெட்டிக்கொன்றுவிட்டதை எண்ணி தனசேகர் கண்ணீர்விட்டு கதறி அழுதார். பின்னர் அவரே ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனசேகரை கைது செய்தனர்.

பாஸ்கரும், தனசேகரும் அண்ணன்-தம்பி போன்று இல்லாமல் நண்பர்கள் போன்று இருப்பார்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com