தோவாளையில் கொடூரமாக கொன்று ஆண் பிணம் பாலத்தின் அடியில் வீச்சு பரபரப்பு தகவல்கள்

தோவாளையில் கொடூரமாக கொன்று ஆண் பிணத்தை பாலத்தின் அடியில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தோவாளையில் கொடூரமாக கொன்று ஆண் பிணம் பாலத்தின் அடியில் வீச்சு பரபரப்பு தகவல்கள்
Published on

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் தோவாளை பண்டாரபுரம் பகுதியில் நான்கு வழிச்சாலையில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் துணை சூப்பிரண்டு ஜவகர், இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணமாக கிடந்தவரை பார்வையிட்டனர்.

அப்போது பாலத்தில் பதிக்கப்பட்டிருந்த கம்பி ஒன்று பிணமாக கிடந்தவரின் கழுத்து பகுதியில் பின்பக்கமாக சொருகியபடி இருந்தது. இந்த கம்பி முன்பக்கம் வரை ஊடுருவிய நிலையில் காட்சி அளித்தது. படுகாயங்களும் ஆங்காங்கே உடலில் தென்பட்டன. அதாவது கொலையாளிகள் அந்த அளவுக்கு அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

கம்பி சொருகிய நிலையில் இருந்ததால் பிணம் நின்றபடி இருந்தது. மேலும் உடல் அழுகி போனதால் அவர் யாரென்று அடையாளம் காண போலீசாரால் முடியவில்லை. எனவே அருகில் உள்ள போலீஸ் நிலையம், பக்கத்து மாநில போலீஸ் நிலையங்களில் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா? என்ற தகவலை போலீசார் சேகரித்தனர்.

இதற்கிடையே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடூரமாக கொன்று ஆண் பிணத்தை பாலத்தின் அடியில் வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com