நெல்லையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம் - பணிகள் பாதிப்பு

நெல்லையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.
நெல்லையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம் - பணிகள் பாதிப்பு
Published on

நெல்லை,

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயீஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு ஊழியர்கள் சங்கத்தினர் இணைந்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று 2-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதத்திற்கு தமிழ்நாடு தொலை தொடர்பு ஊழியர்கள் சங்க தலைவர் ஆண்டபெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்ட செயலாளர் சூசைமரிய அந்தோணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்து பேசினார்.

அவர் பேசுகையில், பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை எந்த காரணத்தை காட்டியும் வேலை நீக்கம் செய்யக்கூடாது. ஊழியர்களின் கோரிக்கையை நிர்வாகம் உடனே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

இந்த உண்ணாவிரதத்தில் சங்க செயற்குழு உறுப்பினர் முருகன், பொருளாளர் நல்லையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தால், பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு பழுதை நீக்க ஆட்கள் இல்லாமல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் இந்த நெட்ஒர்க்கில் இருந்து வேறு கம்பெனிகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். பி.எஸ்.என்.எல். தொலைபேசி பழுதடைந்தால் அதை சரிசெய்ய 3 நாட்களுக்கு மேல் ஆகிறது. புதிய தொலைபேசிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. பழைய தொலைபேசிகளும் சரியாக செயல்படுவதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அவர்களால் சரியான பதில் கூறமுடியவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com