கட்டிட காண்டிராக்டர் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை

வீட்டை இடிக்கப்போவதாக பொதுப் பணித்துறை நோட்டீஸ் வழங்கியதால் கட்டிட காண்டிராக்டர் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கட்டிட காண்டிராக்டர் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

செங்குன்றம்,

சென்னையை அடுத்த அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 49). கட்டிட காண்டிராக்டர். இவர் கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பு இடத்தை வாங்கினார். அங்கு ரூ.40 லட்சம் செலவில் வீட்டை கட்டினார்.

ஒரு வாரத்துக்கு முன்பு கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்கப்போவதாக பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் விரக்தியில் இருந்த சண்முகம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ளவர்களிடம் செங்குன்றம் செல்வதாக கூறிவிட்டு வந்தார்.

பின்னர் அவர் செங்குன்றம் புள்ளிலைன் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி எதிரே காலி மனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாக நேற்று காலை சென்ற பொதுமக்கள் இது குறித்து செங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com