மாட்டுவண்டி தொழிலாளி குத்திக்கொலை தம்பி கைது

வில்லியனூர் அருகே ஆற்றங்கரை ஒரத்தில் உள்ள சவுக்கு தோப்பில் மாட்டுவண்டி தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.
மாட்டுவண்டி தொழிலாளி குத்திக்கொலை தம்பி கைது
Published on

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பம் புதுநகரை சேர்ந்தவர் குமார் (வயது 45), மாட்டுவண்டி தொழிலாளி. இவர் நேற்று மாலை 4 மணி யளவில் கோனேரிக்குப்பம் சங்கராபரணி ஆற்றங்கரை ஒரத்தில் உள்ள சவுக்கு தோப்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமாரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

குமாரிடம் அவரது தம்பி ராஜேந்திரன் செல்போனில் கடைசியாக பேசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனை போலீசார் தேடி வந்தனர். அவர் கோனேரிக்குப்பம் ஆற்றங் கரை பகுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜேந்திரனை கைது செய்தனர்.

அவரிடம் தீவிரமாக விசாரித்ததில், தனது அண்ணன் குமாரை கொலை செய்ததை ராஜேந்திரன் ஒப்புக்கொண்டார். இதுபற்றி போலீசார் கூறியதாவது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் தனது பக்கத்து வீட்டு பெண்ணை கோடாரி முனையில் மானபங்கம் செய்ய முயற்சித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனுக்கு தர்மஅடி கொடுத்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் போலீசில் புகார் கொடுக்க நடவடிக்கை எடுத்தபோது, குமார் சமரசம் பேசினார். இதற்கிடையே அண்ணன்-தம்பிகளுக்கு இடையே மணல் அள்ளுவதிலும் தகராறு ஏற்பட்டது. இதில் குமாரின் மாடுகளை ராஜேந்திரன் கத்தியால் வெட்டிபடுகாயப்படுத்தி உள்ளார்.இதுகுறித்து கேட்பதற்காக கோனேரிக்குப்பம் சங்கராபரணி ஆற்றங்கரையில் ராஜேந்திரன் இருப்பதாக தகவல் அறிந்த குமார், அவரை பார்ப்பதற்காக அங்கு சென்றார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், குமாரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

தனது அண்ணனை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ராஜேந்திரன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை சம்மட்டியால் அடித்து கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. சிறையில் அடைக்கப்பட்ட அவர், அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கொலை செய்யப்பட்ட குமாருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும், சவுந்தர்யா, சவுமியா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com