

பர்கூர்:
பர்கூர் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரி மீது பஸ் மோதியது
சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை மேல்மலையனூரை சேர்ந்த டிரைவர் ஜெயராமன் (வயது 46) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக திருவண்ணாமலையை சேர்ந்த ஜான்முகமது (43) என்பவர் பணியில் இருந்தார். பஸ்சில் 36 பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அருகே பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரில் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது பஸ் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதி நின்றது.
6 பேர் படுகாயம்
இந்த விபத்தில் பஸ் டிரைவர் ஜெயராமன், கண்டக்டர் ஜான்முகமது மற்றும் பயணிகள் செங்கல்பட்டை சேர்ந்த வேலு (39), நந்தன் (28), ரங்கராஜ் (45), சித்தூரை சேர்ந்த கிருஷ்ணப்பா (52) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.