பஸ் பயணிகளிடம் செல்போன் ஜேப்படி - 2 வாலிபர்கள் கைது

அவினாசியில் ஜேப்படி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பஸ் பயணிகளிடம் செல்போன் ஜேப்படி - 2 வாலிபர்கள் கைது
Published on

அவினாசி,

அவினாசியில் பஸ் பயணிகளிடம் செல்போன் ஜேப்படி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அவினாசியை அடுத்துள்ள பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் ஜோதி பிரகாஷ்(வயது 24). இவர் அவினாசி புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்காக பஸ் ஏற முயன்றார்.அப்போது கூட்ட நெரிசலாக இருந்ததால் அவருக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவர் ஜோதிபிரகாசின் சட்டைப்பையில் இருந்த செல்போனை ஜேப்படி செய்தார். இதை பார்த்த சக பயணிகள் சிலர் அந்த வாலிபரை பிடித்தனர். இதை கண்ட மற்றொரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த பயணிகள் அந்த வாலிபரையும் துரத்திப்பிடித்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் ஈரோடு மாவட்டம் பண்ணாரி புது பீர்க்கடவு பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி என்பவரின் மகன் ஜெயக்குமார் (20) மற்றும் பவானிசாகர் அம்மாபாளையத்தை சேர்ந்த கிட்டான் என்பவரின் மகன் சிவா(30) என்பதும், இருவரும் பயணிகளிடம் செல்போன்களை ஜேப்படி செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ஜெயக்குமார், சிவா ஆகியோரை கைது செய்தனர். மேலும் இருவரிடம் இருந்தும் தலா ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com