வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி - ஒருவர் கைது

வேலை வாங்கித்தருவதாக பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி - ஒருவர் கைது
Published on

திருவண்ணாமலை,

ஆரணி தாலுகா கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவுரி (வயது 44). இவருக்கு சொந்தமாக ஆரணி சத்தியமூர்த்தி சாலையில் கடை உள்ளது. இந்த கடையை வாடகைக்கு எடுத்து ஆரணி அருணகிரி சத்திரம் கண்ணப்பன் தெருவை சேர்ந்த உமாபதி என்பவரின் மனைவி வசந்தாவும், அவரது மகன் விக்ரமும் (37) சேர்ந்து பெண்கள் அழகு நிலையம் நடத்தி வந்தனர்.

விக்ரமும், வசந்தாவும் சேர்ந்து அவர்கள் நடத்தி வரும் கடையில் பங்குதாரராக சேர்ப்பதாகவும், பள்ளியில் வேலை வாங்கி தருவதாகவும் கவுரிக்கு ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி கவுரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.5 லட்சமும், டிசம்பர் மாதம் ரூ.3 லட்சமும் என மொத்தம் ரூ.8 லட்சம் கொடுத்து உள்ளார்.

இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் அவர்கள் கடையை காலி செய்துவிட்டனர். மேலும் கவுரிக்கு வேலையும் வாங்கித்தரவில்லை. இதனால் கவுரி பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தரவில்லை. இதுகுறித்து கவுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு பின் விக்ரம் ரூ.3 லட்சத்திற்கான காசோலை கொடுத்துள்ளார். கவுரி காசோலையை வங்கியில் செலுத்தினார். பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துவிட்டது.

அதைத் தொடர்ந்து கவுரி மீண்டும் விக்ரமிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்காமல் அவர் தொடர்ந்து கால தாமதம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து கவுரி மீண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விக்ரமும், அவரது தாயார் வசந்தாவும் சேர்ந்து கவுரியிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து விக்ரம் மற்றும் வசந்தா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்ரமை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com