

புனே,
மராட்டியத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 22 சடலங்களை ஒரே ஆம்புலன்சில் திணித்து கொண்டு சென்று தகனம் செய்த அவலம் நடந்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கூட பஸ்களில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல அனுமதிக்குமாறு வட்டார போக்குவரத்து துறையிடம் மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதற்கு புனே வட்டார போக்குவரத்து அதிகாரி அஜித் ஷிண்டே அனுமதி வழங்கி உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், மாவட்டத்தில் 10 பள்ளி பஸ்களில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சமூக சேவகர்கள் உதவியுடன் இயக்கப்படும் அந்த பஸ்களில் சடலங்களை கொண்டு செல்ல வசதியாக இருக்கைகள் அகற்றப்பட்டு உள்ளது. இதற்கான வாடகை கட்டணம், டிரைவர் ஊதியம் போன்றவை சமூகசேவை நிறுவனத்தால் செலுத்தப்படும். கொரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் வேலை இழந்து இருக்கும் டிரைவர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது, என்றார்.