ஊரடங்கால் வேலை இல்லாததால் வறுமை; கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய வாலிபர்

ஊரடங்கால் வேலை இல்லாமல் வறுமையில் வாடியதால் நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து ஆடு திருடிய வாலிபர், மனைவியுடன் கைதானார்.
ஊரடங்கால் வேலை இல்லாததால் வறுமை; கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய வாலிபர்
Published on

திருவொற்றியூர்,

எண்ணூர் மீனவ கிராமங்களான எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், நெட்டுகுப்பம் பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் காணாமல் போவதாக ஆட்டின் உரிமையாளர்கள் கடந்த 3 வாரங்களாக போலீசில் புகார் செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் முழு தளர்வில்லா ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனை பயன்படுத்தி மொபட்டில் வந்த கணவன்-மனைவி, சாலையில் படுத்து இருந்த ஆடுகளை திருடிச்செல்வதை கண்ட அப்பகுதி இளைஞர்கள், அவர்களை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள், எண்ணூர் போலீசாரிடம் இருவரையும் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், தண்டையார்பேட்டையை சேர்ந்த கார்த்தி(வயது 27) மற்றும் அவருடைய மனைவி காவேரி (27)என்பது தெரியவந்தது.

எண்ணூரைச் சேர்ந்த பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான காவேரி, ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கார்த்தி, ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இருவரும் ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருவல்லிக்கேணியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் கணவன்-மனைவி இருவரும் வறுமையில் வாடினர். இதனால் மனைவி கூறியதை கேட்டு எண்ணூர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்தார். அதில் ஒரு ஆட்டுக்கு ரூ.3 ஆயிரம் கிடைப்பதால் அதை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

போலீசார் சந்தேகப்படாமல் இருக்க நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியுடன் மொபட்டில் சென்று ஆடுகளை திருடியதும், இவ்வாறு இதுவரை 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் விற்பனை செய்ததும் தெரிந்தது.

இதையடுத்து எண்ணூர் போலீசார் கணவன்-மனைவி 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com