5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: கடைசி நாளில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் எஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல்

5 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலையொட்டி கடைசி நாளில் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் எஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: கடைசி நாளில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் எஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல்
Published on

பெங்களூரு,

5 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலையொட்டி கடைசி நாளில் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். பல்லாரியில் திப்பேசாமி சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ஜமகண்டி, ராமநகர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் ராமநகர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் அனிதா குமாரசாமி, அதே தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சந்திரசேகர், மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் சிவராமேகவுடா, பா.ஜனதா வேட்பாளர் ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரி சித்தராமையா, ஜமகண்டியில் பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீகாந்த் குல்கர்னி, சிவமொக்காவில் பா.ஜனதா வேட்பாளர் ராகவேந்திரா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் கடைசி நாளான நேற்று சிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் மது பங்காரப்பா மனு தாக்கல் செய்தார். அப்போது முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் மந்திரிகள் காகோடு திம்மப்பா, கிம்மனே ரத்னாகர் ஆகியோர் உடன் இருந்தனர். பல்லாரியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா, பா.ஜனதா வேட்பாளர் சாந்தா ஆகியோரும் நேற்று மனுக்களை தாக்கல் செய்தனர். இரு கட்சிகளின் வேட்பாளர்களும் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர்.

அதேபோல் ஜமகண்டியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் நியாமகவுடா ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். பல்லாரி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. திப்பேசாமி மனு தாக்கல் செய்துள்ளார். அவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். பா.ஜனதாவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திப்பேசாமியின் தொகுதியான முலகால்மூரு தொகுதி ஸ்ரீராமுலுவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் திப்பேசாமி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் அவர் சுயேச்சையாக போட்டியிடுவது, பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று(புதன்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 20-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. 3-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 6-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படு கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com