விசாரணைக்கு ஆஜராகாததால் சிறையில் அடைக்கப்பட்ட, பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு வழங்கியது

விசாரணைக்கு ஆஜராகாததால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
விசாரணைக்கு ஆஜராகாததால் சிறையில் அடைக்கப்பட்ட, பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு வழங்கியது
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் நிர்மலாதேவி. தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்த இவர் சில மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் மதுரை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது.

கடந்த மாதம் 18-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உதவி பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை.

நிர்மலாதேவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் விசாரணைக்கு வரவில்லை என்று அவரது வக்கீல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பரிமளா, நிர்மலாதேவிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலாதேவியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை சிறையில் நிர்மலாதேவியை அடைத்தனர்.

இந்தநிலையில் பேராசிரியை நிர்மலாதேவி சார்பில் ஜாமீன் மனு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நேற்று நடந்தது.

ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை, அவரது தரப்பில் வக்கீல் பசும்பொன் பாண்டியன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி மகாராஜன், வழக்கு விசாரணைக்கு நிர்மலா தேவி தவறாமல் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கினார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com