

பெங்களூரு,
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அக்கட்சி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்த எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, சோமசேகரரெட்டி, முருகேஷ் நிரானி, ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் நேற்று எடியூரப்பாவை நேரில் சந்தித்து, மந்திரி பதவி குறித்து பேசினர். இந்த நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்கப்படும் என்று எடியூரப்பா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்கப்படும். தோற்றவர்களுக்கு மந்திரி பதவி வழங்கும் பேச்சுக்கே இடமில்லை. வருகிற 21 அல்லது 22-ந் தேதிக்கு பிறகு நான் டெல்லி சென்று, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவு எடுப்பேன்.
இந்த மாத இறுதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.