கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது
Published on

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக உத்திரமேரூர் போலீசுக்கு தொடர்ந்து தகவல் வந்தது. இந்தநிலையில் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின்பேரில், போலீசார் உத்திரமேரூர் அடுத்துள்ள திருப்புலிவனம் பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு பத்திரிகையாளர்கள் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 இளைஞர்களை மடக்கி விசாரணை மேற்கொண்டார். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் அவர்கள்மீது சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது, அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் உத்திரமேரூர் காஞ்சீபுரம் சாலையில் பால் டெப்போ எதிரே வசிக்கும் ஜெகன் (வயது 19), நெல்வாய் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (22), சென்னை என்.எஸ்.கே நகரை சேர்ந்த கார்த்திக் (26) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com