செஞ்சி அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு - கிராம மக்கள் சாலை மறியல்

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு - கிராம மக்கள் சாலை மறியல்
Published on

கள்ளக்குறிச்சி,

செஞ்சி அருகே ஊரணிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவரும் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரும் மோட்டார் சைக்கிளில் செஞ்சி நோக்கி புறப்பட்டனர். ஊரணிதாங்கல் கிராம பகுதியில் சென்றபோது எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். சிவா பலத்த காயம் அடைந்தார்.

மேலும் காரில் வந்த 2 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் காரை அடித்து சேதப்படுத்தினர். தொடர்ந்து விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் உள்ளிட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காயமடைந்த சிவா மற்றும் காரில் வந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com