சரக்கு ஆட்டோ சாலையில் கவிழ்ந்து மணமகள் குடும்பத்தினர் 35 பேர் காயம்

பெரம்பலூர் அருகே விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற போது சரக்கு ஆட்டோ சாலையில் கவிழ்ந்ததில் மணமகள் குடும்பத்தினர் 35 பேர் காயம் அடைந்தனர்.
சரக்கு ஆட்டோ சாலையில் கவிழ்ந்து மணமகள் குடும்பத்தினர் 35 பேர் காயம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்த நதியாவுக்கும், கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்த சுரேசுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில், மணப்பெண் வீட்டார் தங்களது உறவினர்களோடு, மணமகன் வீட்டில் நடைபெற்ற விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 30-க்கும் மேற்பட்டோர் சரக்கு ஆட்டோ ஒன்றில் நேற்று சென்று கொண்டிருந்தனர். தம்பிரான்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் செல்வக்குமார் (வயது 32) சரக்கு ஆட்டோவை ஓட்டினார். பெரம்பலூர்-செட்டிக்குளம் ரெங்கநாதபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முத்து(70), ராமசாமி(60), அன்பரசன் (55), ராசம்மாள்(60), பூபதி (60), மகாலட்சுமி(42), கலைச்செல்வி(30), ஜெயலட்சுமி (40), பாப்பா (75), ராணி (45), வள்ளியம்மை (64), ராஜகோபால் உள்பட 35 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், அன்பரசன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து, பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரக்கு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றிச்செல்ல கூடாது என்று போலீசார் பலமுறை எச்சரிக்கை செய்தும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தியும் இவ்வாறு ஆட்களை ஏற்றிச் செல்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போதும் சரக்கு ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதால் தான் 35 பேர் காயம் அடைவதற்கு காரணமாகும். இனிமேல், சரக்கு ஆட்டோக்களில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com