செல்போன் கோபுரத்தில் ஏறி திடீர் போராட்டம் 6 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, செல்போன் கோபுரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
செல்போன் கோபுரத்தில் ஏறி திடீர் போராட்டம் 6 பேர் கைது
Published on

திண்டுக்கல்,

காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய மத்திய அரசு 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக் கக்கூடாது என்று கூறி வருகிறது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், நேற்று தமிழ் தேசிய கட்சியினர் திண்டுக்கல் நாகல்நகர் காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள செல்போன் கோபுரத்தில் திடீரென ஏறினர்.

கையில் கொடியுடன் ஏறிய அவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரி கோஷம் எழுப்பினர். மேலும், மத்திய அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வந்த தமிழ் தேசிய கட்சி மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜோசப் சந்தியாகு மற்றும் பாக்கியராஜ், லட்சுமணன், முனியாண்டி, முத்துப்பாண்டி ஆகிய 6 பேரையும் கைது செய்த போலீசார், வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com