கொளத்தூர் மக்காராம் தோட்டத்தில் உள்ள கல்லறை தோட்டம் தனியார் வசமானதற்கு எதிர்ப்பு மீட்டுத்தரக்கோரி மாநகராட்சிக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்

சென்னை கொளத்தூர் மக்காராம் தோட்டத்தில் கல்லறை தோட்டம் உள்ளது. ஜி.கே.எம். காலனி, பூம்புகார் நகர், செந்தில்நகர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இந்த கல்லறையையே பயன்படுத்தி வந்தனர்.
கொளத்தூர் மக்காராம் தோட்டத்தில் உள்ள கல்லறை தோட்டம் தனியார் வசமானதற்கு எதிர்ப்பு மீட்டுத்தரக்கோரி மாநகராட்சிக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்
Published on

சென்னை,

இந்தநிலையில் கல்லறை தோட்டம் தனியாருக்கு சொந்தமானது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் தீர்ப்பு சாதகமாக வந்தநிலையில் அந்த கல்லறை தனியார் வசம் வந்தது. இதையடுத்து அந்த கல்லறையை சமன்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது. கல்லறை தோட்டத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து கல்லறை சமன்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நீண்ட காலமாக இந்த கல்லறை தோட்டத்தை பயன்படுத்தி வருகிறோம். இப்போது திடீரென்று இதை தனியார் உரிமை கோரினால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வேறு பகுதிக்கு தான் செல்லவேண்டும். எனவே இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து பெருநகர சென்னை மாநகராட்சி மேல்முறையீடு செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த நிலத்தை உரிய இழப்பீடு கொடுத்து தனியாரிடம் இருந்து மாநகராட்சி மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கவேண்டும், என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com