கள்ளப்பெரம்பூர் பகுதியில் சம்பா மகசூல் குறைந்தது விவசாயிகள் கவலை

கள்ளப்பெரம்பூர் பகுதியில் சம்பா மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கள்ளப்பெரம்பூர் பகுதியில் சம்பா மகசூல் குறைந்தது விவசாயிகள் கவலை
Published on

கள்ளப்பெரம்பூர்,

மேட்டூர் அணையில் இருந்து தேவையான அளவு தண்ணீர் கிடைக்காததால் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்து விட்டது. சம்பா, தாளடி, குறுவை என 3 போகமும் விளைவிக்கப்பட்டு வந்த நெல், கடந்த சில ஆண்டுகளாக இரு போகமாக மாறி விட்டது. கடைமடை பகுதியில் ஒரு போகம் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கர்நாடகத்தில் நல்ல மழை பெய்தால் மட்டுமே தஞ்சை மாவட்ட விவசாயிகள் நெல் சாகுபடியை திருப்திகரமாக செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. கடந்த ஆண்டில் (2018) கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால், அங்கு உள்ள அணைகள் வேகமாக நிரம்பின.

அதன் காரணமாக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணையை 4 முறை நிரப்பியது. இந்த தண்ணீரை பயன்படுத்தி தஞ்சை அருகே கள்ளப்பெரம்பூர், ஆலக்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சம்பா நெல் சாகுபடி மேற்கொண்டனர். தற்போது இப்பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

வழக்கமாக ஒரு ஏக்கர் வயலில் 35 நெல் மூட்டைகள் முதல் 50 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் இந்த முறை ஆலக்குடி பகுதியில் ஒரு ஏக்கருக்கு 20 மூட்டை நெல் மட்டுமே மகசூலாக கிடைக்கிறது. மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஆலக்குடி பகுதியில் உள்ள பெரும்பாலான வயல்களில் நெற்கதிர்களை புகையான் நோய் தாக்கி உள்ளதால் மகசூல் குறைவாக உள்ளது. ஒரு ஏக்கருக்கு 20 மூட்டை நெல் மகசூலாக கிடைக்கிறது. இது மிகவும் குறைவு. ஆந்திரா பொன்னி ரக நெல்லை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.23 ஆயிரம் செலவானது.

நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து விட்டதால், செலவு செய்த தொகை கூட கிடைக்கவில்லை. இதனால் நஷ்டத்தில் உள்ளோம்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com